போரதீவு பற்று பிரதேசத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 2ம் கட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.

மணல் வீதிகள் அற்ற கிராமங்கள் எனும் கருத்திட்டத்திற்கு அமைவாக, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் 2ம் கட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக போரதீவு பற்று பிரதேசத்தில் மக்கள் பாவனை அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் வெல்லாவெளி மாரியம்மன் ஆலய வீதி மற்றும் நெல்லிக்காடு பழனி முருகன் ஆலய வீதி போன்ற மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக செப்பனிடும் பணிகளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் ஆரம்பித்து வைத்திருந்தார்.

போரதீவு பற்று பிரதேசத்தில் குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் 2ம் கட்டமாக 35 மில்லியன் செலவில் 4km மணல் வீதிகள் கிறவல் வீதிகளாக செப்பனிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் போரதீவு பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சசி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கனடா கிளை இணைப்பாளர் கண்ணன், போரதீவு பற்று பிரதேச குழு இணைப்பாளர் கருணைராஜன், செயலாளர் பிரசாத், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்